உலகின் முதல் உயிருக்கு என்றைக்கு செவிகள் பிறந்ததோ அன்றே மொழியின் முதற்கூறு மூளையில் உருவாகியிருக்க வேண்டும். காதில் கேட்ட ஒலியை வாயால் கூற முயற்சித்தது மிருகங்களின் சத்தமாகவோ பறவைகளின் சத்தமாகவோதான் இருக்க வேண்டும்.
எதிரில் இருக்கும்போது சுட்டிக்காட்ட விரல்கள் போதுமானது. அதனைக் கண்டிராத ஒருவனுக்கு விளக்க வேண்டியத் தேவை வரும்போது சித்திரம் தேவைப்படுகிறது. அன்றுதான் எழுத்தின் முதல் அச்சு பதிக்கப்பட்டிருக்க வேண்டும்.
மொழி ஆராய்ச்சி எதுவும் தேவையில்லை. அந்த ஆதிமனிதன் வரைந்த முதல் சித்திரம்தான் உலகின் மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி. உடல் வலுவாக இருப்பதனால் மிருகங்களை வேட்டையாடும் பொறுப்பு ஆடவனிடம் வந்திருக்க வேண்டும். அதன் நுட்பங்களை விளக்கும் பொறுப்பும் அவனையே சாரும். உலகின் முதல் சித்திரம் வரைந்தது ஆணின் கைகளாக இருக்கலாம். ஆக தாய்மொழியை ஈன்றெடுத்தது ஒரு தந்தையாக இருக்கலாம்.
இது மொழியின் தோற்றத்தை ஆராயும் பக்கமன்று. எனது பல்பத்தின் முதல் எழுத்து அகரம்தான். என் உயிர்மொழியாம் தமிழ்தான். உலகை மையமாக வைத்து வளர்ந்த தமிழை மையமாக வைத்து முதல் எழுத்தை எழுத வேண்டும் என்பது எனது ஆசை.
எனது பதிவுகளில் மொழி பற்றிய கருத்துக்கள் இருக்கலாம், அரசியல் இருக்கலாம், சமீபத்திய நிகழ்வுகள் இருக்கலாம், ஆனால் அத்தனையும் எனது மூளையின் இடியாப்பச் சிக்கலில் எங்கோ ஒரு மூலையில் சுய உணர்வுடன் எழுதிய கருத்துக்கள் மட்டுமே.
Discover more from தமிழ்த்தாயின் திருமகன்
Subscribe to get the latest posts sent to your email.
Published by தமிழ்த்தாயின் திருமகன்
ராஜேஷ் லிங்கதுரை என்னும் நான் பிறந்தது தூத்துக்குடிக்கு அருகில் இருக்கும் முள்ளக்காடு என்னும் கிராமம். கல்லூரியில் சேர்ந்த முதல் நாள், ஆசிரியர் உனக்கு எந்த ஊர் என்று கேட்டபோது, எனது ஊர் முள்ளக்காடு, எனது ஊருக்கு அருகிலேதான் தூத்துக்குடி இருக்கிறது என்று சொன்னேன். அவருக்கு நினைவிருக்கிறதோ இல்லையோ உடன்படித்த நண்பர்கள் அனைவரிடமும் எனது பெயர் முள்ளக்காடு என்று பதிவாகிப்போனது. எனது ஊரின் பெயர் என்னை விட்டுப் பிரிக்க முடியாதது.
பொறியாளர் பட்டம் பெற்று பின்பு வணிகவியல் மேலாண்மையும் படித்து, இரண்டுக்கும் தொடர்பில்லாத மென்பொருள் துறையில் வேலை. சாதி, மதம் போன்ற அடையாளங்கள், அரசாங்க அடையாள அட்டைகளுக்கு மட்டும்தான். வாழ்வில் சாதி, மதம் இரண்டையும் வெறுத்து ஒதுக்கி பல ஆண்டுகள் ஆகிறது. பகுத்தறிவாளன் என்ற சொல்லாடலைப் பயன்படுத்த விரும்பவில்லை. பகுத்தறிவு மனிதனாய்ப் பிறந்த எல்லோருக்கும் பொதுவானது. நான் கடவுள் மறுப்பாளன். ஆனால், இல்லாத கடவுளும், இருக்கின்ற கோவில்களும் சமூகத்துக்குத் தேவைதானா என்றால், ஆம் என்பதே எனது பதில்.
சங்க இலக்கியங்களைப் பொருத்தவரை, நிலம், பொழுது ஆகிய இரண்டும் முதற்பொருள். ஆனால், என்னைப் பொருத்தவரை, முதற்பொருள் மொத்தம் மூன்று. நிலம், பொழுது, மொழி. மொழியென்ற ஒன்று இல்லையென்றால், நாமும் விலங்குகளும் ஒன்றுதான். நம்மை மனிதன் என்று உணர வைப்பது நம் தாய்மொழிதான். ஆகவே, தாய்மொழி தாயினும் மேலானது. என் உயிரின் வேர் தமிழ்தான்.
நேற்று பெய்த தொழில்நுட்ப மழையில் முளைத்த இணையத்தில், இன்று தளிர்த்த புது எழுத்தாளர்களில் நானும் ஒருவன். எழுத்து என் முழுநேரப் பணியல்ல. எனது சில ஆசைகளுக்கும், பல ஆற்றாமைகளுக்கும் வாய் முளைக்கும்போது, கட்டுரைகளாக மலர்கின்றன. அதில் அறமும் இருக்கும், அறச்சீற்றமும் இருக்கும்.
எனக்கு தமிழ்த்தாய் மட்டுமே. இந்தியத்தாய் வேண்டுமானால் செவிலித்தாயாக இருந்துவிட்டுப் போகட்டும். வாழ்க தமிழ். வளர்க தமிழ்.
View all posts by தமிழ்த்தாயின் திருமகன்