அறிவில் சிறந்தவர்கள் என்றும் ஆளுமைத்திறனுடன் இருப்பார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால், வெறும் புராணக்கதைகள் மூலமாகவும், பொய்யான வரலாற்றுக் கதாபாத்திரங்கள் மூலமாகவும் நாங்கள் அறிவாளிகள் என்று சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால், ஒட்டுமொத்த இந்தியாவே அப்படிப்பட்ட கற்பனைக் கதாபாத்திரங்கள் மூலமாகவும், புராணக்கதைகள் மூலமாகவும் அடிமையாக்கப்பட்டது என்று சொன்னால் உங்களுக்கு வியப்பாக இருக்கும். அப்படி உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை கதாபாத்திரம்தான் சாணக்கியன்.
சாணக்கியன்தான் சந்திரகுப்த மௌரியரை ஆளாக்கி மௌரிய அரசை உருவாக்கினான் என்று சொல்கிறார்கள். இந்தியாவிலே சாணக்கியன்தான் தலைசிறந்த அறிவாளி என்று பலரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். யார் இந்த சாணக்கியர்? சாணக்கியர் தொடர்பான வரலாற்று சான்றுகள் என்ன? விளக்குகிறது இந்தக்காணொளி.
அறிவு உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது. அதனை மனிதர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்பதே ஒரு நேர்மையற்ற செயல். அப்படி இருக்கையில், மனிதர்களில் ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டும்தான் அறிவாளிகள் என்ற மாய பிம்பத்தை உருவாக்க முனைவது எவ்வளவு அறமற்ற செயலாக இருக்குமென்று ஒரு நொடி சிந்தித்துப் பாருங்கள். இந்தியாவில் காலங்காலமாக நடந்து கொண்டிருக்கும் ஒரு அறிவுத்திருட்டுக்கு எதிரான குரலாக உருவாக்கப்பட்டதுதான் இந்தக் காணொளி. காணொளியைப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.
Discover more from தமிழ்த்தாயின் திருமகன்
Subscribe to get the latest posts sent to your email.
ராஜேஷ் லிங்கதுரை என்னும் நான் பிறந்தது தூத்துக்குடிக்கு அருகில் இருக்கும் முள்ளக்காடு என்னும் கிராமம். கல்லூரியில் சேர்ந்த முதல் நாள், ஆசிரியர் உனக்கு எந்த ஊர் என்று கேட்டபோது, எனது ஊர் முள்ளக்காடு, எனது ஊருக்கு அருகிலேதான் தூத்துக்குடி இருக்கிறது என்று சொன்னேன். அவருக்கு நினைவிருக்கிறதோ இல்லையோ உடன்படித்த நண்பர்கள் அனைவரிடமும் எனது பெயர் முள்ளக்காடு என்று பதிவாகிப்போனது. எனது ஊரின் பெயர் என்னை விட்டுப் பிரிக்க முடியாதது.
பொறியாளர் பட்டம் பெற்று பின்பு வணிகவியல் மேலாண்மையும் படித்து, இரண்டுக்கும் தொடர்பில்லாத மென்பொருள் துறையில் வேலை. சாதி, மதம் போன்ற அடையாளங்கள், அரசாங்க அடையாள அட்டைகளுக்கு மட்டும்தான். வாழ்வில் சாதி, மதம் இரண்டையும் வெறுத்து ஒதுக்கி பல ஆண்டுகள் ஆகிறது. பகுத்தறிவாளன் என்ற சொல்லாடலைப் பயன்படுத்த விரும்பவில்லை. பகுத்தறிவு மனிதனாய்ப் பிறந்த எல்லோருக்கும் பொதுவானது. நான் கடவுள் மறுப்பாளன். ஆனால், இல்லாத கடவுளும், இருக்கின்ற கோவில்களும் சமூகத்துக்குத் தேவைதானா என்றால், ஆம் என்பதே எனது பதில்.
சங்க இலக்கியங்களைப் பொருத்தவரை, நிலம், பொழுது ஆகிய இரண்டும் முதற்பொருள். ஆனால், என்னைப் பொருத்தவரை, முதற்பொருள் மொத்தம் மூன்று. நிலம், பொழுது, மொழி. மொழியென்ற ஒன்று இல்லையென்றால், நாமும் விலங்குகளும் ஒன்றுதான். நம்மை மனிதன் என்று உணர வைப்பது நம் தாய்மொழிதான். ஆகவே, தாய்மொழி தாயினும் மேலானது. என் உயிரின் வேர் தமிழ்தான்.
நேற்று பெய்த தொழில்நுட்ப மழையில் முளைத்த இணையத்தில், இன்று தளிர்த்த புது எழுத்தாளர்களில் நானும் ஒருவன். எழுத்து என் முழுநேரப் பணியல்ல. எனது சில ஆசைகளுக்கும், பல ஆற்றாமைகளுக்கும் வாய் முளைக்கும்போது, கட்டுரைகளாக மலர்கின்றன. அதில் அறமும் இருக்கும், அறச்சீற்றமும் இருக்கும்.
எனக்கு தமிழ்த்தாய் மட்டுமே. இந்தியத்தாய் வேண்டுமானால் செவிலித்தாயாக இருந்துவிட்டுப் போகட்டும். வாழ்க தமிழ். வளர்க தமிழ்.
View all posts by தமிழ்த்தாயின் திருமகன்